குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஒவ்வொரு மாணவனுக்கும் ஒழுங்கைக் கற்பிப்பது அவசியம், அவர்கள் தேசிய மேம்பாடு குறித்த நற்பார்வையையும் கொண்டிருக்க வேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர்
குருச்சேத்திரப் பல்கலைக் கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் அவர் உரை ஆற்றினார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 APR 2018 1:24PM by PIB Chennai
ஒவ்வொரு மாணவனுக்கும் ஒழுங்கைக் கற்பிப்பது அவசியம், அவர்கள் தேசிய மேம்பாடு குறித்த நற்பார்வையையும் கொண்டிருக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார். அரியானா மாநிலம் குருஷேத்ராவில் இன்று (19.04.2018) குருஷேத்ரா பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார். அரியானா மாநில ஆளுநர் பேராசிரியர் கப்தான் சிங் சோலங்கி, அரியானா மாநிலக் கல்வியமைச்சர் திரு ராம் விலாஸ் ஷர்மா மற்றும் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளது என்று கூறிய குடியரசுத் துணைத்தலைவர், புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அறிவாற்றலையும், திறனையும் பெற வேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். தேசநிர்மாணத்துக்கு மாணவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கல்வி வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல, அறிவு மற்றும் திறன் மேம்பாட்டுக்கும் அது அவசியம் என்று அவர் கூறினார்.
விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளித்துவரும் அரியானா மாநிலத்தைப் பாராட்டுவதாகத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவர், சமீபத்தில் முடிவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
அர்த்தமுள்ள அனைத்துப் பிரச்சனைகளிலும் விவாதத்தை ஜனநாயகம் அனுமதிக்கிறது என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், ஆனால், ஆக்கப்பூர்வ விவாதங்கள் மட்டுமே விடைகளையும், தீர்வுகளையும் அளிக்க முடியும் என்றார். எதிர்ப்பு தெரிவிக்கும்போது அமைதியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்றும் அவர் கூறினார். எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் அவர் கூறினார்.
குடியரசுத் துணைத் தலைவரின் முழு இந்தி மொழி உரைக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1529659)
வருகையாளர் எண்ணிக்கை : 165