வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிரதமர் வீட்டு வசதி திட்டம், அம்ருத் மற்றும் பொலிவுறு நகரம் திட்டங்களில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்

Posted On: 25 JUN 2019 3:06PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் முன்னோடித் திட்டங்களால், நாட்டில் வீட்டுவசதியை ஏற்படுத்துவதில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

தில்லியில் இன்று காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் மத்திய-மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசுத் துறை அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்த அவர், பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டம், அடல் நகர்ப்புற மறுசீரமைப்பு மற்றும் மாற்றத்திற்கான திட்டம் மற்றும் பொலிவுறு நகர திட்டம் ஆகியவை நாட்டின் நகர்ப்புறத்தை மாற்றியமைப்பது மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளது என்றார். நகர்ப்புற மறுசீரமைப்புக்கான முதலீடு 2004-14 ஆம் ஆண்டில் ரூ.1.57 லட்சம் கோடியாகும் என்று தெரிவித்த அவர், 2014-19 ஆம் ஆண்டுகளில் இந்த முதலீடு 554 சதவீதம் அதிகரித்து ரூ.10.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இதில் நகர்ப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், அடல் நகர்ப்புற மறுசீரமைப்பு மற்றும் மாற்றத்திற்கான திட்டம் மற்றும் பொலிவுறு நகர திட்டம் ஆகியவற்றுக்கு 8 லட்சக் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீட்டுவசதி அளிக்கும் வகையில், நகர்ப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் ரூ.4.83 லட்சக் கோடி செலவில் 81 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நகர்ப்புறங்களில் வாழும் ஏராளமான ஏழை மக்களுக்கு உதவும் நோக்கம் நிறைவேறி உள்ளதாகவும் அமைச்சர்       ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார். இந்த திட்டத்தில், இதுவரை 26 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கினை எட்டும் திசை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். 13 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டு வருவதாகவும் அவர் அறிவித்தார். இந்த வீட்டுவசதி திட்டங்களுக்கு மத்திய அரசின் உதவியாக 1,26,000 கோடி ரூபாய் வழங்க உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதில் 51,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை வழங்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, நகர்ப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில் வழங்கப்படும் வீடுகள், குடும்பத் தலைவியின் பெயரிலோ அல்லது குடும்பத் தலைவர், தலைவி ஆகிய இருவரின் பெயரிலோ வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் குடிநீர் விநியோகம், கழிவுநீர் வசதி மேம்பாடு, குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற பூங்காக்கள் அமைப்பது, மழைநீர் வடிகால் வசதி, மாசு ஏற்படுத்தாத வாகனங்கள் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு, அடல் நகர்ப்புற மறுசீரமைப்பு மற்றும் மாற்றத்திற்கான திட்டம் துவங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இதற்காக 77,640 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட மாநில திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் 22 கோடிக்கும் மேற்பட்ட நகர்ப்புற மக்கள் பயனடைவர்.

குடிநீர் தட்டுப்பாடு என்ற நிலையிலிருந்து குடிநீர் பாதுகாப்பு என்ற நிலையை அடைவதற்கு, 33,900 கோடி ரூபாய் செலவில் 1,132 திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த வீட்டு வசதி திட்டங்கள் முடிவுறும் நிலையில், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கழிவுநீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்துவதற்காக நாடு முழுவதும் 26,589 கோடி ரூபாய் செலவில் 622 கழிவுநீர் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நகர்ப்புற கட்டமைப்பை, நவீன முறையில் மேம்படுத்தி மக்களுக்கு தரமான வாழ்க்கை முறையை அமைத்து கொடுக்கும் வகையில் பொலிவுறு நகர திட்டம் துவங்கப்பட்டது. நாட்டு மக்களுக்கு இணையதளம் மூலம் சேவைகளை வழங்க இந்த திட்டத்தின் கீழ் 16 ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் குற்றங்கள் தடுக்கப்படுவதுடன் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறைந்துள்ளன. மேலும் 55 மையங்கள் அமலாக்க நிலையில் உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக 100 சிறப்பு நடவடிக்கை குழுக்கள், நகர அளவிலான 100 ஆலோசனைக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதோடு, 100 திட்ட மேலாண்மை ஆலோசகர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலிவுறு நகரம் தொடர்பான 5,151 திட்டங்களை செயல்படுத்த 2,05,000 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

******************

 

 


(Release ID: 1575618)