மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
இந்தியாவில் ஆன்லைன் கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளை பெறும் நோக்கத்தில் `பாரத் பதே ஆன்லைன்' என்ற ஒரு வார கால இயக்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 APR 2020 2:43PM by PIB Chennai
இந்தியாவில் ஆன்லைன் கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கான சிந்தனைகளை பெறும் நோக்கத்தில் `பாரத் பதே ஆன்லைன்' என்ற ஒரு வார கால இயக்கத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' இன்று புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அமைச்சர், இப்போதுள்ள டிஜிட்டல் கல்வி தளங்களை பிரபலப்படுத்துவதுடன், ஆன்லைன் கல்விச் சூழலில் இருக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் / தீர்வுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு, நாட்டில் உள்ள சிறந்த அறிவாளிகளுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில், இந்த ஒருவார கால இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். இதுதொடர்பான கருத்துக்களை bharatpadheonline.mhrd[at]gmail[dot]com என்ற இமெயில் முகவரியிலோ, #BharatPadheOnline என்ற ஹாஸ்டேக்கை போட்டு ட்விட்டர் கணக்கு மூலமாகவோ 2020 ஏப்ரல் 16 ஆம் தேதி வரையில் தெரிவிக்கலாம். ட்விட்டர் இணைப்பைப் பயன்படுத்தும்போது @HRDMinistry மற்றும் @DrRPNishank என்ற கணக்குகளுக்கும் டேக் (tag) செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்வதால், அந்த விவரங்கள் தங்களுக்கும் தெரிய வரும் என்று அவர் குறிப்பிட்டார். அந்த ஆலோசனைகளை தாமே நேரில் ஆய்வு செய்யப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதில் ஆசிரியர்களும், மாணவர்களும் தான் நம்முடைய முக்கிய இலக்கு என்று அவர் கூறினார். இப்போதைய ஆன்லைன் கல்வி வழிகளை மேம்படுத்துவதற்கு, இந்த இயக்கத்தில் அவர்கள் முழு மனதுடன் பங்கேற்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இப்போது பள்ளிக்கூடங்கள் அல்லது உயர் கல்வி நிலையங்களில் பயில்பவர்கள் பல்வேறு கல்வித் திட்டங்களை வழங்கும் இந்த டிஜிட்டல் தளங்களில் தினமும் பங்கேற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். இப்போது ஆன்லைன் தளங்களில் என்ன குறைபாடு உள்ளது என்பதைத் தெரிவிக்கலாம் என்றும், மாணவர்களை இன்னும் அதிக அளவில் ஈடுபாடு கொள்ளச் செய்ய என்ன செய்யலாம் என்று தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் ஆன்லைன் கல்வியை இன்னும் தீவிரப்படுத்துவதற்கு, இந்த பிரத்யேகமான முன்முயற்சியில் இந்தியர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று திரு நிஷாங்க் வேண்டுகோள் விடுத்தார்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1612949)
வருகையாளர் எண்ணிக்கை : 264
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam