சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பிரதமரின் ஜன் தன் கணக்கு நிதி அதிகாரமளித்தலை வழங்கியுள்ளது
மகளிர் ஜன் தன் கணக்குகளில் ரூ.30,000 கோடி போடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 AUG 2020 5:13PM by PIB Chennai
பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28-ம்தேதி தொடங்கி வைத்த பிரதமர் ஜன் தன் திட்டம், வெள்ளிக் கிழமையுடன் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பிரதமர் தமது சுதந்திர தின உரையில், 40.35 கோடி ஜன் தன் கணக்குகளில், 22 கோடி கணக்குகள் பெண் பயனாளிகளுக்குச் சொந்தமானவை என்று தெரிவித்தார். கோவிட்-19 முடக்கத்தின் போது, ரூ.30,000 கோடிப் பெண்களின் ஜன் தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெண்களின் ஜன் தன் கணக்குகளில் மாதம் ரூ.500 வீதம் பண உதவியாக இந்த கோவிட்-19 காலத்தில் செலுத்தப்பட்டு வருகிறது. பொது முடக்கம் குறிப்பாக தினக்கூலி பெறுவோருக்கு வேலைகளை இழக்க காரணமாகி விட்டது. பண உதவி, உணவு தானியங்கள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட இலவச ரேசன், கடன் உதவி உள்பட பிரதமர் தற்சார்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.
அனைத்து குடிமக்களுக்கும் நிதி அதிகாரமளித்தல் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் ஜன் தன் கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது. 40 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் கணக்கு வைத்திருப்போர் தங்கள் கணக்குகளில் ரூ.130,701 கோடி வைத்துள்ளனர்.1.26 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், குறிப்பாக கிராமப் பகுதிகளில், கிளையற்ற வங்கி சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. குறைந்த பட்ச தொகையைப் பராமரிக்க தேவையில்லை என்ற இருப்பு இல்லாத கணக்கு இந்தத் திட்டத்தின் ஈர்ப்பான அம்சமாகும். பிரதமர் ஜன் தன் கணக்குகளில் இருப்புக்கு ஏற்ப வட்டி வழங்கப்படுகிறது. கணக்கு வைத்திருப்போருக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. கணக்கு வைத்திருப்போருக்கு ரூ.10,000 வரை ஓவர் டிராப்ட் வசதியும் உள்ளது. பிரதமர் ஜன் தன் கணக்குகள் , நேரடி பணப்பயன் மாற்றம், பிரதமர் ஜீவன் ஜோதி பீம யோஜனா, பிரதம மந்திரி சுரக்சா பீம யோஜனா, அடல் பென்சன் யோஜனா, முத்ரா திட்டம் ஆகியவற்றைப் பெறுவதற்கு தகுதியானவை ஆகும்.
தமிழகத்தில், 10,820, 801 பயனாளிகள் பிரதமர் ஜன் தன் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்ளனர். அவர்களது வங்கி கணக்குகளில் ரூ.2,809 கோடி உள்ளது. கோவிட்-19 முடக்க காலத்தில், பெண்களின் ஜன் தன் கணக்குகளில் மாதம் ரூ.500 செலுத்தப்படும் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொது முடக்கத்தால், வழக்கமான நிலையான வருமானத்தை இழந்து விட்டதால், மேலும் பண உதவி அவசியம் என பெண் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாயனூரைச் சேர்ந்த திருமதி சீதாலட்சுமி, திருச்சி அல்லிதுறையைச் சேர்ந்த திருமதி ரேவதி ஆகியோர் பிரதமர் ஜன் தன் திட்டத்தின் கீழ், ரூ.500 பெற்று வருவதாகக் கூறினர். ரசியா பேகம் போன்ற பயனாளிகள், அரசு ரூ.2000 என்னும் அதிக பண உதவியை இந்த கோவிட்-19 தொற்று காலத்தில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பிரதமர் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு ,ஆறு ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், குறிப்பாக பெண் வங்கி கணக்காளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. கிராமப்புற குடும்பங்களில், வீட்டுப் பொருளாதாரத்தை பராமரிக்கும் பெண்களுக்கு இது தங்கள் வாழ்வாதாரத்தைப் பராமரிக்க பெரிதும் உதவும். நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு, தளர்வுகள் அமலாகும் போது, பொருளாதார நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு வரும்போது, கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். அதுவரை, தொற்றை எதிர்த்து போராட அரசு அளிக்கும் ஆதரவுக்கரம் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

ரசியா பேகம் , கரூர்

பிரதமர் ஜன் தன் முத்திரை

சீதாலட்சுமி, தாயனூர், திருச்சி
(வெளியீட்டு அடையாள எண்: 1648971)
வருகையாளர் எண்ணிக்கை : 22