உள்துறை அமைச்சகம்

காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் (பிபிஆர்&டி) தனது பொன்விழா ஆண்டுவிழாவை இன்று கொண்டாடுகிறது

Posted On: 28 AUG 2020 4:46PM by PIB Chennai

காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் (பிபிஆர் &டி) தனது பொன்விழா ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது. இதனைக் கொண்டாட இணையம் மூலம் காணொளி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. ஜி.கிஷன் ரெட்டி முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பிபிஆர்&டி பொன்விழா கொண்டாடுவதை அடுத்து பிரதமர் திரு.  நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். “கடந்த 50 ஆண்டுகளில், பிபிஆர்&டி சிறிதளவும் தவறாமல் நமது தேச சேவையில் உறுதியுடன் பணியாற்றி வருகிறது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிடையேயும் பாதுகாப்பு உணர்வைத் தூண்டும் நவீன, பயனுள்ள மற்றும் உணர்திறன் வாய்ந்த பாதுகாப்புக் கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டிற்கே நாங்கள் முக்கியத்துவம் அளித்துவருகிறோம். என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா பிபிஆர்&டி பொன்விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “இன்று பொன்விழா கொண்டாடும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்திற்கு எனது வாழ்த்துக்கள். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் பிபிஆர்&டி முக்கியமான பங்கு வகித்துள்ளது. நாட்டில்  மேலும் வலிமையான மற்றும் நவீன காவல்துறை அமைப்பினை ஏற்படுத்துவதற்கான பிபிஆர்&டி-இன் தொடர் தேடலுக்கு நான்  மரியாதை செலுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி, புதிய சிந்தனை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் தேசத்தின் பாதுகாப்பிற்கு காவல் துறையினரைத் திறனுள்ளவர்களாக மாற்றுவது ஆகியவை ஒரு புதிய இந்தியாவிற்கும், ஆத்மனிர்பர் திட்டத்திற்கும் முக்கிய அம்சமாகும் என்று கூறினார். நிமிடத்திற்கு நிமிடம் மாற்றங்கள் நிகழும் காலத்தின் வேகத்தை ஈடு செய்ய நாட்டில் சட்டம் ஒழுங்கு உள்கட்டமைப்பை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இல்லாமல் இதை அடைய முடியாது என்று அவர் கூறினார்.

*****



(Release ID: 1649288) Visitor Counter : 219