சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அஞ்சல் துறையின் மத்திய மண்டலம் சார்பில் திருச்சியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
Posted On:
21 JUN 2025 8:25PM by PIB Chennai
சர்வதேச யோகா தினத்தையொட்டி, மத்திய மண்டல அஞ்சல் துறை இன்று (21.06.2025) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் கொள்ளிடம் வடிகால் பகுதியில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள முக்கொம்பு மேலணையில் சிறப்பு யோகாசன பயிற்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சியான ஹரித் யோகா எனப்படும் இயற்கை சூழலில் யோகா பயிற்சியை மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஏற்ப இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு யோகாசன நிகழ்வு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்வளத்துறை அனுமதியுடன் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் திருமதி தி. நிர்மலா தேவி தொடங்கி வைத்தார். 150-க்கும் மேற்பட்ட அஞ்சல் பணியாளர்கள் இந்த சிறப்பு யோகாசன பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு யோகாசன பயிற்சி நிகழ்வில் விவேகானந்தா யோகா மையத்தினர், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த டாக்டர் திருநிறைச்செல்வி மற்றும் குழுவினர் பங்கேற்று பயிற்றுவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு பிரகாஷ், திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலக உதவி இயக்குநர் திரு கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து அஞ்சல் கோட்டங்களில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்கள், ரயில்வே தபால் அலுவலகங்கள், கிளை தபால் அலுவலகங்களில் யோகா நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவற்றில் ஆயிரக்கணக்கான அஞ்சல் பணியாளர்கள் பங்கேற்றனர்.
*******
AD/PLM/ RJ
(Release ID: 2138577)