சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
பாஸ்போர்ட் சேவை தினத்தையொட்டி வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் வாழ்த்து
Posted On:
24 JUN 2025 1:42PM by PIB Chennai
13-வது பாஸ்போர்ட் சேவை தினத்தையொட்டி உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைத்து பாஸ்போர்ட் சேவை பிரிவு அதிகாரிகளுக்கும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:
கடந்த 11 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகளை பட்டியலிட்ட அவர் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டும் வகையில் மத்திய அரசின் நிர்வாக நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் பாஸ்போர்ட் சேவைகளில் பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார். கடந்த 2014-ம் ஆண்டு 91 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 2024-ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை ஒரு கோடியே 46 லட்சமாக அதிகரித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாகவும், இதனை உறுதி செய்யும் வகையில் நாடு முழுவதும் பாஸ்போர்ட் சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்கான முதல்கட்ட பரிசோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இந்த புதிய நடைமுறை அனைத்து இந்திய தூதரகங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மற்றுமொரு மைல்கல் நடவடிக்கையாக மின்னணு பாஸ்போர்ட் சேவைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். பாஸ்போர்ட்டில் மின்னணு சிப்கள் பொருத்தப்படுவதன் மூலம் மின்னணு சாதனங்களின் வாயிலாக பயணிகளின் விவரக் குறிப்புகளை நேரடி தொடர்பின்றி பெறுவதன் மூலம் மக்களின் பயணம் மற்றும் குடியேற்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளும் எளிமைப்படுத்தப்படும். காவல் துறையினரின் சரிபார்ப்பு நடவடிக்கைகள் 5 முதல் 7 நாட்களுக்குள் நிறைவு பெறும் வகையில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொபைல் பாஸ்போர்ட் காவல் செயலி அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஓராண்டு காலத்தில் அஞ்சல் அலுவலகங்களில் 10 புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் குஷி நகரில் 450-வது அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் பாஸ்போர்ட் சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் மக்களுக்கு வாகனங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவைகளை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள பணியாளர்கள் மற்றும் தொழில் முறை சார்ந்தவர்கள் உலக அளவில் தங்களது செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு இது உதவுகிறது.
பாஸ்போர்ட் அலுவலகங்கள், பாஸ்போர்ட் சேவை மையங்கள், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் மற்றும் இந்த சேவை தொடர்பான அனைத்து தரப்பினர் உட்பட அஞ்சல் துறை நாஷிக்கில் உள்ள நாணய அச்சுக் கூடம், மாநில காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற துறை சார்ந்தவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார்.
***
AD/SV/SG/KR
(Release ID: 2139163)