• Skip to Content
  • Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர்களை எட்டும் திறன் பெற்றுள்ளது


இந்த நிதியாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு 500 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதியாகும்

Posted On: 10 JAN 2023 6:45PM by PIB Chennai

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலர்களை எட்டும் திறன் பெற்றுள்ளது. சென்னையில் இன்று (10.01.2023) நடைபெற்ற இந்த ஒப்பந்தம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சந்திப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தொழில்களுக்கான நிலக்கரி, அலுமினியம் போன்ற கச்சா பொருட்கள் விலைமலிவாக இருப்பதால் நாட்டின் போட்டித் தன்மைக்கு உதவும் என்றும் இந்திய நுகர்வோர்களுக்கு கட்டுப்படியான விலையில் தரமான பொருட்களை தர முடியும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.  இறுதிப் பயன்பாட்டுக்கான பெரும் பகுதி பொருட்களை இறக்குமதி செய்யும் ஆஸ்திரேலியாவும் இந்த ஒப்பந்தம் மூலம் பயனடையும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கான சந்தையில் ஜவுளி, ஆடைகள், மணிக்கற்கள், ஆபரணங்கள், தோல் மற்றும் தோல் அல்லாத  காலணிகள், கைவினைப் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், பொறியியல் பொருட்கள் போன்றவற்றில் தமிழ்நாடு அதிக பங்கு வகிக்க முடியும் என்று இந்த நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றிய மத்திய அரசின் தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் எம் பாலாஜி தெரிவித்தார்.

நிதியாண்டு 2021-2022-ல் தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 384 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்றும் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏற்றுமதி 322 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்றும் அவர் கூறினார்.  இதையடுத்து இந்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதி 500 மில்லியன் அமெரிக்க டாலரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டாக்டர் பாலாஜி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய தூதரகத்தின் கான்சல் ஜென்ரல் சாரா கிர்லியு, இந்த ஒப்பந்தம் 29.12.2022 அன்று நடைமுறைக்கு வந்ததாகவும் இது இருநாடுகளின் உத்திபூர்வ நலன்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார்.

சென்னையிலுள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்ககத்தின் மண்டல கூடுதல் தலைமை இயக்குநர் திருமதி ராஜலட்சுமி தேவராஜ் பேசுகையில், இந்திய-ஆஸ்திரேலியா இடையேயான வர்த்தக தடைகள் நீக்கப்பட்டிருப்பது இருநாடுகளின் வர்த்தக நலன்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்றார். உடனடியான தீர்வையில்லாத அணுகுமுறை காரணமாக இந்திய ஏற்றுமதிகளின் போட்டித் தன்மை அதிகரித்திருப்பதாகவும் இதன் விளைவாக சந்தையின் பங்கு உயரும் என்றும் அவர் கூறினார்.

சென்னையிலுள்ள ஏற்றுமதி ஆய்வு முகமையின் துணை இயக்குநர் திரு சி ஜெயபாலன், ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகத்தின் மண்டல மேலாளர் சுபாஷ் சாகர், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி கௌன்சிலின் மண்டல இயக்குநர் திரு சி.எச். நாடிகார் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

***************

SMB/RJ/KPG



(Release ID: 1890083) Visitor Counter : 135


Link mygov.in