• Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சொல்லாற்றலை விட மனித நேயமும், மாண்புமே உலக மக்களை இணக்கத்துடன் வாழ்விக்க உதவும் - கவிஞர் நந்தலாலா

இடுகை இடப்பட்ட நாள்: 11 JAN 2023 6:13PM by PIB Chennai

சொல்லாற்றலை விட மனித நேயமும், மாண்புமே உலக மக்களை இணக்கத்துடன்  வாழ்விக்க உதவும்  என கவிஞர் நந்தலாலா கூறியுள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் முனைவர் எல் முருகன் திங்களன்று இக்கண்காட்சியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியின் மூன்றாம் நாளான இன்று கவிஞர் நந்தலாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு "இலக்கியம் படி: இதயம் விரியும்", என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தனிமனித வளர்ச்சிக்கு அன்பு, அறிவு அவசியம் என்றார். அதே நேரம் மனித நேயத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். செயலாற்றலை விட மனித நேயமும், மாண்புமே உலக மக்களை இணக்கத்துடன்  வாழ்விக்க உதவும் என்றும், மனிதர்களை மாண்புடன் வாழ வைப்பதில் இலக்கியங்களின் பணி மகத்தானது என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட அலுவலர் மருத்துவர் ஜே‌.லாவண்யா, காசநோயை முறையான சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்தலாம் என்றார்.

2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  காசநோய் உள்ள அனைவரும், தொடர்ந்து மருந்துகளை உட்கொண்டால் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடையலாம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே விநாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  பிற்பகலில் நடைபெற்ற அமர்வில், எழுத்தாளர் முனைவர் விமலா அண்ணாதுரை ' விடுதலை போராட்டத்தில் மகளிர் பங்கு ' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.  நாளை முற்பகலில் தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினரும் சித்த மருத்துவருமான கு. சிவராமன் 'ஒற்றை நலம் ' என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

இன்றைய நிகழ்ச்சியில் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் இயக்குநர் ஜெ.காமராஜ், துணை இயக்குநர் டி.சிவக்குமார், கள விளம்பர அலுவலர் கே. ஆனந்த பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  

 

  

***************

AP/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 1890433) வருகையாளர் எண்ணிக்கை : 153
National Portal Of India
STQC Certificate