• Sitemap
  • Advance Search
சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இன்சாட் 3டி எஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2024 8:26PM by PIB Chennai

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இன்சாட் 3டி எஸ் செயற்கைக்கோளை வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தியது. ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 05:35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், செயற்கைக்கோள் சரியான சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப் பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த செயற்கைக்கோள் காலநிலை மாற்றங்களை சரியாக கணித்து, வானிலை முன்னறிவிப்பு வழங்க பெரிதும் உதவும் என்று கூறினார். இது 25 நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து அனுப்பும் என்றும் கூறினார்.

புவி அறிவியல் அமைச்சகத்தின் பல துறைகள், இந்திய வானிலை ஆய்வுத் துறை, மத்திய-தர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம், மற்றும் பல்வேறு நிறுவனங்கள்  மேம்படுத்தப்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் வானிலை சேவைகளை வழங்க இந்த செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், விண்வெளித் துறையில் புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு சிறப்பாக இர்ப்பதாகவும் இது மென்மேலும் தனியார் துறையினர் இத்துறையில் பங்களிப்பை வழங்க உதவுமென்றும் தெரிவித்தார். இந்த ஆண்டு ககன்யான் ஆய்வுக்கு தயாராகும் ஆண்டாக இருக்கும் என்றும், வரும் ஆண்டுகளில் சந்திரனில் ரோபோவை பயன்படுத்தி தரையிறங்கி அங்கிருந்து மாதிரிகளை எடுத்து மீண்டும் பூமிக்கு கொண்டுவந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் இது குறித்து பல்வேறு கட்ட தயார்நிலைகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    

    

*******

 

AD/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2006829) வருகையாளர் எண்ணிக்கை : 96
National Portal Of India
STQC Certificate