• Skip to Content
  • Sitemap
  • Advance Search
பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

வளர்ச்சியிடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றத்தை குடியரசுத் தலைவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்: பிரதமர்

வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இந்த நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டு மிக முக்கியமானதாக இருக்கும்: பிரதமர்

ஒவ்வொரு நபரும் நாடு ஒரு முக்கியமான தருணத்தை அடைந்துள்ளதாக உணர்கின்றனர் - பின்னோக்கிப் பார்க்காமல் முன்னேறிச் செல்ல வேண்டும்: பிரதமர்

உலகளாவிய தென் பகுதி் நாடுகளின் வலுவான குரலாக இந்தியா உருவெடுத்துள்ளது: பிரதமர்

நாட்டின் இளைஞர்களுக்கு, இது அளவில்லாத வாய்ப்புகளின் காலம்: பிரதமர்

எத்தனை சவால்கள் இருந்தாலும், எங்களிடம் 140 கோடி தீர்வுகள் உள்ளன: பிரதமர்

இந்தியா இனி வாய்ப்புகளைத் தவறவிடாது - இனி அது முன்னணியில் இருந்து வழிநடத்தும்: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 05 FEB 2026 9:44PM by PIB Chennai

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பதிலளித்துப் பேசினார். அவையில் உரையாற்றிய பிரதமர், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக தமது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது தனது பாக்கியம் என்று கூறினார். கடந்த ஆண்டு வளர்ச்சியடைந்த இந்தியாவின் பயணத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கொண்ட ஆண்டாக இருந்ததாகவும், ஒவ்வொரு துறையிலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் மாற்றம் காணப்படுவதாகவும், நாடு மிக வேகமாக சரியான திசையில் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவர் இந்த கருப்பொருள்களை தெளிவுடன் முன்வைத்ததாக திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

 

நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம், ஏழைகள், கிராமங்கள், விவசாயிகள், பெண்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் பற்றி குடியரசுத் தலைவர் விரிவாகப் பேசியதாகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கான குரலை நாடாளுமன்றத்தில் முன்வைத்ததாகவும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவின் வலிமையை இளைஞர்கள் எவ்வாறு முன்னேற்றுகிறார்கள் என்பதையும் குடியரசுத் தலைவர் விரிவாகக் கூறியதாகவும், ஒவ்வொரு பிரிவின் திறன்களும் வெளிப்படுத்தப்பட்டதாகவும், இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தில் நம்பிக்கையின் வலுவான வெளிப்பாடாகவும் இது அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது என அவர் கூறினார்.

 

21-ம் நூற்றாண்டின் முதல் காலாண்டு முடிவடைந்துவிட்டதாகவும், கடந்த நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டு இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீர்க்கமானதாக இருந்ததைப் போலவே, இந்த நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் சக்திவாய்ந்ததாகவும் வேகமானதாகவும் இருக்கும் என்றும் திரு நரேந்திர மோடி மேலும் குறிப்பிட்டார். நாடு ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்துவிட்டதாக ஒவ்வொரு குடிமகனும் உணர்கிறார் என்றும், இதில் இடையில் நிறுத்துவது அல்லது திரும்பிச் செல்வது என்ற கேள்விக்கே இடமில்லை எனவும், வேகத்துடன் முன்னேறிச் செல்வது, இலக்கை அடைவது, அதை அடைந்த பின்னரே சுவாசிப்பது மட்டுமே உள்ளது என்றும், இந்த திசையில் நாடு முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியா தற்போது ஒரு அரிய சாதகமான சூழ்நிலைகளின் சங்கமத்தைக் காண்கிறது என்பதை எடுத்துரைத்த பிரதமர், இது மிகவும் சாதகமான இணைப்பு என்று கூறினார். உலகின் செல்வந்த நாடுகளில் முதியவர்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா ஒரே நேரத்தில் வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டுகிறது மற்றும் அதிகரித்து வரும் இளைஞர்களைக் கொண்ட நாடாக மாறி வருகிறது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் திறமைக் குழுவிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதால், இந்தியா மீதான உலகத்தின் ஈர்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது என்று திரு நரேந்திர மோடி கூறினார். கனவுகள், உறுதிப்பாடு, திறன் கொண்ட இளம் திறமையாளர்களின் ஒரு முக்கிய குழுவை இந்தியா கொண்டுள்ளது என்றும், இது வலிமையின் இரண்டாவது ஆசீர்வாதம் என்றும் அவர் விவரித்தார்.

 

உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்கி, நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பிரதமர் கூறினார். மேலும், இந்தியப் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்தின் தனித்துவமான கலவை அதன் மீள்தன்மையை பிரதிபலிக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். தனது அரசுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டபோது, இந்தியா 'உடையக்கூடிய ஐந்து' நாடுகளில் ஒன்றாகக் கணக்கிடப்பட்டது என்றும், சுதந்திரத்தின் போது ஆறாவது பெரிய பொருளாதாரமாக இருந்த நாடு, பதினொன்றாவது இடத்திற்குச் சரிந்ததாகவும், ஆனால் இன்று இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் கூறினார்.

 

அறிவியல், விண்வெளி, விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் இந்தியா நம்பிக்கையால் நிரம்பி வழிகிறது என்பதை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். கொவிட்-க்குப் பிந்தைய உலகில், உலகளாவிய ஸ்திரமின்மை வளர்ந்து வருவதால், ஒரு புதிய உலக ஒழுங்கு உருவாகி வருவதாகவும், பாரபட்சமற்ற பகுப்பாய்வு இந்தியாவை நோக்கி தெளிவான பார்வையைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா பல நாடுகளுக்கு நம்பகமான கூட்டாளியாகவும் நண்பராகவும் மாறியுள்ளது என்றும், உலக நலனுக்கு தோளோடு தோள் கொடுத்து பங்களிக்கிறது என்றும் அவர் கூறினார். சர்வதேச தளங்களில் உலக தெற்கு நாடுகளின் வலுவான குரலாக இந்தியா மாறியுள்ளது என்றும், முக்கிய நாடுகளுடன் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள வர்த்தக ஒப்பந்தங்களில் நுழைகிறது என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் உட்பட ஒன்பது குறிப்பிடத்தக்க வர்த்தக ஒப்பந்தங்கள் சமீபத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். எந்தவொரு நாடும் வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடாமல் இந்தியாவை கைவிட்டதாக கடந்த கால அரசுகளை அவர் விமர்சித்தார். வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் கூட்டு சேர ஆர்வமாக உள்ள தற்போதைய சூழ்நிலையை அவர் எடுத்துரைத்தார்.

 

 பொருளாதார சக்தி, மக்கள் சக்தி, வலுவான உற்பத்திச் சூழல் அமைப்பு இருக்கும்போது மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும் என்று அவர் கூறினார். இந்த முன்னுரிமைகளை புறக்கணித்து முன்பு நடந்த வாக்கு வங்கி அரசியலை அவர் விமர்சித்தார். மேலும் எதிர்க்கட்சி அரசுகளுக்கு தொலைநோக்கு, மன உறுதி இல்லை எனவும், இது நாட்டை துன்பத்திற்கு இட்டுச் சென்றது என்றும் அவர் கூறினார்.

 

கடந்த கால தவறுகளைச் சரிசெய்து இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் தமது அரசின் பெரும்பகுதி காலம் செலவிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்ததற்காக நன்றி தெரிவித்தார். இந்தியா இப்போது கொள்கையால் இயக்கப்படுகிறது, தனிமையில் அல்ல என்றும், "சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம்" என்ற மந்திரம் நாட்டை "சீர்திருத்த வரிசையில் நிலைநிறுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். உற்பத்தியை வலுப்படுத்துதல், தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் மதிப்பு கூட்டலை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட கட்டமைப்பு, செயல்முறை மற்றும் கொள்கை சீர்திருத்தங்களை அவர் விரிவாகக் கூறினார். இந்தியா இப்போது உலக அளவில் போட்டியிட முழுமையாகத் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

 

உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி மன்றங்கள் தற்போது இந்திய தொழில்முனைவோரை சமமாகப் பார்க்கின்றன என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கூட வெளிநாடுகளில் இந்த சமத்துவத்தை அனுபவித்து பெருமையுடன் திரும்பி வருவதாகக் கூறினார். நீண்டகால பொருளாதார சக்தியை வழங்கும் இந்தியாவின் குறு,சிறு, நடுத்தர தொழில்கள் கட்டமைப்பின் வலிமையை அவர் எடுத்துரைத்தார். மேலும் விமானங்களின் பல அம்சங்கள் இந்தியாவின் சிறிய நடுத்தர நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன எனவும் இதனால் அவை உலகளாவிய நம்பிக்கையைப் பெறுகின்றன என்றும் குறிப்பிட்டார். இந்த முயற்சிகளின் பலன்கள் தெளிவாகத் தெரியும் என்றும், முக்கிய நாடுகள் இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை உருவாக்க ஆர்வமாக உள்ளன என்றும் அவர் கூறினார். சர்வதேச அளவில் பரவலாகப் பாராட்டப்பட்ட ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுடனான சமீபத்திய ஒப்பந்தத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் உலகிற்கு உலகளாவிய ஸ்திரத்தன்மையில் நம்பிக்கையை அளித்ததாகவும், அமெரிக்க ஒப்பந்தம் உத்வேக உணர்வை வலுப்படுத்தியதாகவும், இரண்டும் உலகிற்கு நேர்மறையான சமிக்ஞைகளாக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய வாய்ப்புகளின் மிகப்பெரிய பலன் இந்திய இளைஞர்களுக்குச் செல்லும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். இளைஞர்களைப் பற்றிப் பேசும்போது, நடுத்தர வர்க்க இளைஞர்கள், நகர்ப்புற இளைஞர்கள், கிராமப்புற இளைஞர்கள், மகன்கள் மற்றும் மகள்கள் என அனைவரையும் உள்ளடக்கியதாகவும், அவர்களை தனித்தனியாக பார்க்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். உலகளாவிய சந்தை இப்போது அவர்களுக்குத் திறந்து, எல்லா இடங்களிலும் வாய்ப்புகளை வழங்குவதால், நாடு தமது இளைஞர்களின் வலிமையில் பெருமை கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.  இளைஞர்களை ஊக்குவித்த அவர் தைரியத்துடன் முன்னேறுமாறு வலியுறுத்தினார். ஏனெனில் நாடு இளைஞர்களை ஆதரிக்கிறது, உலகம் அவர்களின் பங்களிப்பை எதிர்பார்க்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

மாநிலங்களவை மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆனால் இங்கு விவாதத்தின் அளவு அதிகமாக இருந்திருக்க வேண்டும் எனவும் ஆனால் எதிர்க்கட்சிகள் அந்த வாய்ப்பை தவறவிட்டனர் எனவும் நாடு அவர்களை எவ்வாறு நம்பும் என்றும் அவர் கேள்விகளை எழுப்பினர். தன்னை ஒரு மன்னர் என்று பெருமையுடன் அழைத்துக் கொள்ளும் ஒரு உறுப்பினர் பொருளாதார சமத்துவம் பற்றிப் பேசுவதும், கேள்வி எழுப்புவதும் முரண்பாடாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். மேற்கு வங்க ஆளும் கட்சியை பிரதமர் விமர்சித்தார். அவர்களின் நிர்வாகம் அனைத்து நிலைகளிலும் புதிய சரிவுகளை ஏற்படுத்தி, மக்களின் எதிர்காலத்தை இருளில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் கூறினார். ஊடுருவல்கள் இந்திய இளைஞர்களின் உரிமைகள், வாழ்வாதாரங்கள், பழங்குடி நிலங்களை பறிப்பதாகவும், மகன்கள் மற்றும் மகள்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும், அதே நேரத்தில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்கின்றன என்றும் கூறினார். ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க நீதிமன்றங்களுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் இந்திய இளைஞர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்றும், இதுபோன்ற செயல்களை மன்னிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

 

ஊழல் மற்றும் அத்துமீறல்களில் மூழ்கியுள்ளவர்களை பிரதமர் மேலும் விமர்சித்தார். அவர்களின் அரண்மனைகள் வெறுப்பின் சின்னங்களாக மாறிவிட்டன என்று குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்தியிலும் மாநிலங்களிலும் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும், அவர்களின் அடையாளம் ஊழல் மற்றும் தோல்வியுற்ற நிர்வாகமாகவே உள்ளது என்று அவர் கூறினார். "இன்று மசோதாக்கள் விவாதிக்கப்படும்போது, அவை பெருமையுடன் பேசப்படுகின்றன, ஆனால் கடந்த காலங்களில், ஒப்பந்தங்கள் பற்றிய விவாதங்கள் போஃபர்ஸ் ஒப்பந்தம் போன்ற ஊழல்களை மட்டுமே எழுப்பின, ஏனெனில் அந்த அரசுகள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை, தங்களது சொத்துக்களை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தின" என்று பிரதமர் தெரிவித்தார்.

 

வங்கித் துறையை உதாரணம் காட்டி, அதை பொருளாதாரத்தின் உச்ச நிலை என்று திரு நரேந்திர மோடி விவரித்தார். 2014-ம் ஆண்டுக்கு முன்பு, "தொலைபேசி வங்கி" சகாப்தம் நிலவியது எனவும் அங்கு தலைவர்களின் அழைப்புகள் கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்குவதைத் தீர்மானித்தன என்றும் அதே நேரத்தில் ஏழைகள் அவமதிப்புடன் நடத்தப்பட்டனர் என்றும் அவர் கூறினார். முன்பு 50% க்கும் அதிகமான மக்கள் வங்கியின் கதவுகளைப் பார்த்ததில்லை என்றும், அப்போதைய ஆளும் தலைவர்கள் பல கோடிக் கணக்கான பணத்தை தங்கள் கூட்டாளிகளுக்கு வழங்குவதை உறுதி செய்தனர் என்றும், அவர்கள் பணத்தை தனிப்பட்ட சொத்தாகக் கருதினர் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்போதைய ஆளும் ஆட்சியின் கீழும், இப்போது எதிர்க்கட்சி கூட்டணியால் ஆளப்படும் மாநிலங்களின் கீழும், வங்கி முறை சரிவின் விளிம்பில் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். தான் முதன்முதலில் பிரதமரானபோது, ஒரு வெளிநாட்டுத் தலைவர் சீர்திருத்தங்களை முயற்சிப்பதற்கு முன்பு இந்தியாவின் வங்கி முறையை ஆய்வு செய்யுமாறு தனக்கு அறிவுறுத்தியதாக திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.  முந்தைய அரசுகளிள் வராக்கடன்களின் தொடர்ச்சியான விவாதங்கள், வங்கி அமைப்பின் புறக்கணிப்பு ஆகியவை அந்த அரசுகளின் தவறான நிர்வாகத்தைக் காட்டின என்று பிரதமர் கூறினார்.

ஆனால் வங்கி அமைப்பின் அனைத்து தரப்பினரையும் நம்பிக்கையுடன் எடுத்துக்கொண்டு இந்த அரசு புத்திசாலித்தனமாக செயல்பட்டது எனவும் சீர்திருத்தங்கள் தைரியத்துடன் மேற்கொள்ளப்பட்டு, வெளிப்படையான அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் அவர் எடுத்துரைத்தார். ஏராளமான வங்கி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும், சரியாக செயல்பட முடியாத பலவீனமான பொதுத்துறை வங்கிகள் வலுவான வங்கிகளுடன் இணைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். தமது அரசு பதவியேற்றவுடன் உடனடியாக இவை நிறைவேற்றப்பட்டது என்றும் அவர் கூறினார். இதன் விளைவாக, வங்கிகள் ஆழமாக வேரூன்றிய நோயிலிருந்து விடுபட்டு அவற்றின் ஆரோக்கியம் சீராக மேம்பட்டது எனவும் அவை இப்போது வேகமாக முன்னேறி வருகின்றன என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார். "ஆரோக்கியமான வங்கிகளால், பரிவர்த்தனைகள் அதிகரித்தன, மக்கள் நிதியை அணுகினர், சாதாரண மக்கள் பணம் பெற்றனர்" என்று அவர் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் வங்கிகளில் நுழைய மறுக்கப்பட்ட ஏழை மக்களை கடன்கள் சென்றடைந்தன என்பதை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இளைஞர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க அதிகாரம் அளிக்கும் சுயதொழிலுக்கான முத்ரா திட்டத்தின் வெற்றியை அவர் எடுத்துரைத்தார். முத்ரா திட்டத்தின் மூலம், இளைஞர்களுக்கு ₹30 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் உத்தரவாதங்கள் இல்லாமல் வழங்கப்பட்டதாகவும், இதனால் அவர்கள் தங்கள் தொழில்களை விரிவுபடுத்தவும், கணிசமான எண்ணிக்கையிலான பெண் பயனாளிகள் பயன் பெறவும் முடிந்தது என்றும் அவர் கூறினார். சுயஉதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற பெண்கள் இப்போது பெரிய கனவுகளுடன் சுதந்திரமாக நிற்கவும், 10 கோடி பெண்கள் நேரடி நிதி உதவி பெறவும் முடிந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு ஏராளமான கடன்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 2014-க்கு முன்பு உயர்ந்திருந்த வரா கடன்கள், தற்போது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் குறைக்கப்பட்டு, வங்கிகளின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தியதில் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார். "வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு லாபத்தைப் பதிவு செய்கின்றன, இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது" என்பதை அவர் எடுத்துரைத்தார்.

 

பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு காலத்தில் தோல்வியடைய, சரிய அல்லது மூடப்பட வேண்டிய நிறுவனங்களாகக் கருதப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்த மனநிலை யதார்த்தங்களின் அடிப்படையில் வெற்றிகரமாக மாற்றப்பட்டது என்று குறிப்பிட்டார். பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து எதிர்மறையைப் பரப்புபவர்களை திரு நரேந்திர மோடி விமர்சித்தார். எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் எச்ஏஎல் போன்ற நிறுவனங்கள் முந்தைய அரசுகளின் கீழ் ஒரு காலத்தில் தவறாக நிர்வகிக்கப்பட்டன எனவும், ஆனால் தமது அரசு துணிச்சலைக் காட்டி தொடர்ச்சியான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எல்ஐசி அதன் சிறந்த செயல்திறனை வழங்கியுள்ளது என்றும், எதிர்க்கட்சி ஆட்சியின் கீழ் மூடப்படும் விளிம்பில் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் இப்போது லாபத்தைப் பதிவு செய்கின்றன என்றும் அவர் எடுத்துரைத்தார். பொதுத்துறை நிறுவனங்கள் இப்போது இந்தியாவில் தயாரிப்பதை ஊக்குவித்து, சாதனை வேலைவாய்ப்பை உருவாக்கி, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் பெரிய ஆர்டர்களைப் பெறுவதன் மூலம் உலகளவில் விரிவடைந்து வருவதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார். இந்த முக்கியமான 25 ஆண்டு காலத்தில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்கள் இப்போது பல நாடுகளின் வளர்ச்சிப் பயணங்களில் பங்கேற்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

 

இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் கொண்ட 10 கோடி சிறு விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, எதிர்க்கட்சிகள் நாட்டின் விவசாயிகளுக்கும் துரோகம் செய்ததாக பிரதமர் விமர்சித்தார். ஒரு சில பெரிய விவசாயிகளை நிர்வகிப்பது மட்டுமே அமைப்பை நடத்த போதுமானது என்று எதிர்க்கட்சிகள் நம்பியதாகவும், சிறு விவசாயிகளைப் புறக்கணித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சிறு விவசாயிகளின் வலியை தமது அரசு உணர்ந்ததாகவும், கள யதார்த்தங்களை அறிந்து, பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். குறுகிய காலத்தில், ₹4 லட்சம் கோடி நேரடியாக சிறு விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டு, புதிய பலத்தையும், பெரிய கனவுகளைக் காணும் திறனையும் அவர்களுக்கு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் விருப்பங்களுக்கு ஏற்ப விவசாயிகள் பலன்களை வழங்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மலைப்பகுதிகளுக்கு தனித்தனி திட்டங்களை வடிவமைக்க மறுத்த திட்ட ஆணையத்துடன் மூத்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஒருவரே போராடியதாக ஒப்புக்கொண்டதை திரு நரேந்திரமோடி நினைவு கூர்ந்தார். குறைபாடுள்ள பணி கலாச்சாரத்தை ஒப்புக்கொண்ட போதிலும், எந்த திருத்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று திரு நரேந்திர மோடி கூறினார். திட்ட ஆணையம் பல ஆண்டுகளாக தொடர்ந்து பயனற்றதாக செயல்பட்டு, 2014 வரை மக்களை துயரத்தில் ஆழ்த்தியது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தாம் ஆட்சிக்கு வந்த பிறகு, தமது அரசு திட்ட ஆணையத்தை ஒழித்து, நித்தி ஆயோக்கை நிறுவியது எனவும், அது இப்போது மிக வேகமாக செயல்பட்டு வருகிறது என்பதையும் திரு நரேந்திர மோடி விளக்கினார். வளரும் நாடுகளுக்கான வளர்ச்சி மாதிரியாக உலகளாவிய நிறுவனங்கள் அங்கீகரிக்கும் லட்சிய மாவட்டங்களின் வெற்றியை அவர் எடுத்துரைத்தார். ஒரு காலத்தில் பின்தங்கியதாகவும் புறக்கணிக்கப்பட்டதாகவும் கருதப்பட்ட மாவட்டங்கள் இப்போது மாற்றத்தைக் காண்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். தண்டனைப் பணிகளாக அதிகாரிகளை அனுப்பும் முந்தைய கலாச்சாரத்தை திரு நரேந்திரமோடி விமர்சித்தார்.  ஒரு காலத்தில் பின்தங்கிய மாவட்டமாக இருந்த சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர், தற்போது பஸ்தார் ஒலிம்பிக்கிற்காக நாடு தழுவிய அளவில் அறியப்படுகிறது என்று அவர் கூறினார். கிராமங்களை வளர்ச்சி அடையச் செய்து, முதன்முறையாக பேருந்துகள் இயக்கப்படுவதையும், பண்டிகைகளாகக் கொண்டாடப்படுவதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த மாற்றம் நாட்டின் புதிய திசையை பிரதிபலிக்கிறது என்றும், கடந்த காலத்தின் புறக்கணிப்புக்கு முற்றிலும் மாறுபட்டது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

 

உண்மையான செயல்படுத்தல் என்றால் என்ன என்பதற்கு லட்சிய மாவட்டங்கள் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். நூற்றுக்கணக்கான உதாரணங்கள் இருந்தாலும், இதை அவர் குறிப்பாக மேற்கோள் காட்டினார். "எதிர்க்கட்சித் தலைவர்கள் செயல்படுத்துதலால் ஏற்படும் மாற்றத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள், பழைய திட்டக் கமிஷன் மாதிரிகளில் சிக்கித் தவிக்கிறார்கள், அதைத் தாண்டி அவர்களுக்கு எதுவும் தெரியாது" என்று அவர் குறிப்பிட்டார். "சர்தார் வல்லபாய் படேல், நர்மதா நதியில் ஒரு அணை கட்ட வேண்டும் என்று கனவு கண்டார். அதற்கான அடிக்கல்லை ஜவஹர்லால் நேரு நாட்டினார். ஆனால் தாம் பிரதமரான பிறகுதான் அதற்கு திறப்பு விழா நடந்தது" என்பதை திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இது முந்தைய அரசுகளின் செயல்படுத்தல் தோல்வியை சுட்டிக் காட்டுகிறது என அவர் கூறினார். "சர்தார் சரோவர் அணை கட்டுமானத்தை முன்னெடுக்க குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மூன்று நாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருந்தது, அப்போதைய மத்திய அரசை செயல்பட வைக்க தன்னைத்தானே பணயம் வைத்து, இறுதியில் திட்டம் வேகம் பெற்றது. இன்று தூய நர்மதா நீர் கட்ச்சில் உள்ள காவ்டா வரை சென்றடைகிறது" என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

 

அரசியல் ஆதாயத்திற்காக திட்டங்களை அறிவித்து, ஆனால் அதை செயல்படுத்தாமல் எதிர்க்கட்சிகள் இருந்ததை பிரதமர் விமர்சித்தார். இந்த கலாச்சாரத்தை மாற்ற, தடைபட்ட திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் பிரகதி என்ற தொழில்நுட்ப தளத்தை தாம் உருவாக்கியதாக அவர் கூறினார்.  பிரகதி மூலம், திட்டங்களை ஒவ்வொரு மாதமும் தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்வதன் மூலம், முன்னேற்றத்தை உறுதி செய்ததாக அவர் கூறினார். பிரதமர் நிலையில் இந்த விரிவான கண்காணிப்பு காரணமாக, ₹85 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டதாக அவர் பெருமையுடன் கூறினார். "இது செயல்படுத்தல் வேகம் என்ன என்பதைக் காட்டுகிறது. ரயில்வே, சாலைகள், நீர்ப்பாசனம் மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பு அனைத்தும் இந்த வழிமுறையின் கீழ் தீர்க்கப்பட்டன" என்று அவர் கூறினார்.

ஜம்மு-உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் பாதையை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இந்தத் திட்டம் 30 ஆண்டுகளாக, இரண்டு தலைமுறைகளாக முடங்கிப் போயிருந்தது எனவும் ஆனால் தமது அரசு அதை நிறைவு செய்தது என்றும் குறிப்பிட்டார். பனி மூடிய நிலப்பரப்புகளில் வந்தே பாரத் ரயில் ஓடுவதைக் காட்டும் வைரலான வீடியோவை அவர் குறிப்பிட்டார். இதுவே செயல்படுத்துதலின் சக்தி என்று அவர் கூறினார்.

 

பின்னர் பிரதமர் அசாமைப் பற்றிக் குறிப்பிட்டு, பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த அருணாச்சலத்தையும் அசாமையும் இணைக்கும் போகிபீல் பாலத்தைக் குறிப்பிட்டார். பிரகதி திட்டத்தின் கீழ் தமது அரசு அதை மறுபரிசீலனை செய்து முடித்தது எனவும் அசாம் மற்றும் முழு வடகிழக்குக்கும் மகத்தான நன்மைகளை வழங்குகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

 

தமது அரசு திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பது மட்டுமல்லாமல், பெரும்பாலும் திட்டமிட்டதை விட முன்னதாகவே முடிப்பதாக திரு நரேந்திர மோடி கூறினார். 2030-ம் ஆண்டுக்குள் சில சூரிய சக்தி இலக்குகளை அடைவதற்கு இந்தியா உறுதியளித்திருந்தது எனவும் ஆனால் அவை 2025-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், எத்தனால் இலக்குகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அடையப்பட்டன என்று அவர் கூறினார். இது தமது அரசின் செயல்படுத்தலின் வலிமையைக் காட்டுகிறது என்றும், இது வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

 

சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த தங்கள் கட்சியின் அணுகுமுறை எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். இது வானம் மற்றும் பூமி போன்ற மிகப்பெரிய வித்தியாசம் என்று விவரித்தார். 140 கோடி மக்களும் சவால்களுக்கு தீர்வுகளை வழங்க வல்லவர்கள் என்பது அரசின் நம்பிக்கை என்றும், மக்கள் மீதான இந்த நம்பிக்கையே ஜனநாயகத்தின் உண்மையான பலம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு நேர்மாறாக, எதிர்க்கட்சிகள் மக்களையே பிரச்சினைகளாகக் கருதுகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். கடந்த கால உதாரணத்தை மேற்கோள் காட்டி, இந்திய மக்களிடையே 140 கோடி தீர்வுகள் உள்ளன என்ற தமது அரசின் நம்பிக்கையைப் போலல்லாமல், முன்பு மக்களே பிரச்சினைக்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். தமது அரசைப் பொறுத்தவரை, மக்கள் பிரகாசமான எதிர்காலத்தின் சிற்பிகள் மற்றும் இயக்கிகள் என்றும், அவர்களைப் பிரச்சினைகளாகக் கருதக் கூடாது என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.

 

மக்களை அவமதிப்பது எதிர்க்கட்சிகளின் இயல்பு மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றிவிட்டதாக திரு நரேந்திர மோடி கூறினார். எதிர்க்கட்சிகள் சமீபத்தில் குடியரசுத் தலைவரை அவமதித்ததாகவும், தேர்தலுக்குப் பிறகு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் வெட்கக்கேடானவை என்றும் அவர் எடுத்துரைத்தார். மக்களவையில் கூட, குடியரசுத் தலைவரின் உரையின் மீதான விவாதம் நடைபெறவில்லை என்றும், இது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு ஒரு பெரிய அவமானம் என்றும் அவர் கூறினார். ஏழை, பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு உயரும்போது, அவரை அவமதிப்பது அவருக்கு மட்டுமல்ல, பழங்குடி சமூகத்திற்கும், பெண்களுக்கும், அரசியலமைப்பிற்கும், நாட்டிற்கும் அவமானமாகும் என்று அவர் கூறினார்.

 

மக்களவைக்கு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைமை தாங்கியபோது, காகிதங்கள் வீசப்பட்டு மேசைகள் மீது ஏறிய வேதனையான சம்பவத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார். இது வடகிழக்கு மாநிலங்களுக்கும் அதன் மக்களுக்கும் அவமானமாக இல்லையா என்று அவர் கேட்டார். ஆந்திராவில் உள்ள ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகன் தலைவராக இருந்தபோது, அவரும் அவமதிக்கப்பட்டார் எனவும் இது விளிம்புநிலை சமூகங்கள் மீது எதிர்க்கட்சியின் வெறுப்பைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார். அசாம் மக்களால் அவர்கள் துரோகம் செய்யப்பட்டதாக உணருவதால், எதிர்க்கட்சிகள் அவர்கள் மீது வெறுப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பாரத ரத்னா பூபன் ஹசாரிகாவின் மகத்தான திறனை அவர் நினைவு கூர்ந்தார். அவரது குரல் மற்றும் வெளிப்பாடு நாட்டை ஒன்றிணைத்தது, எனவும் அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது என்றும் குறிப்பிட்டார். இதை எதிர்த்ததற்காக எதிர்க்கட்சிகளை பிரதமர் விமர்சித்தார். இது அசாமுக்கும், நாடு முழுவதும் உள்ள கலை ஆர்வலர்களுக்கும், ஹசாரிகாவின் மரபுக்கும் அவமானம் என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினரை "துரோகி" என்று அழைத்த சம்பவத்திற்கு திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார். அந்த எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆணவம் உச்சத்தை எட்டியுள்ளது என்று பிரதமர் கூறினார். பல தலைவர்கள் எதிர்க்கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர் எனவும் ஆனால் இந்த சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர வேறு யாரும் துரோகிகள் என்று அழைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இது சீக்கியர்களுக்கும், குருக்களுக்கும் அவமானம் என்றும், எதிர்க்கட்சியின் சீக்கிய சமூகத்திற்கு எதிரான ஆழமான வெறுப்பின் வெளிப்பாடு என்றும் அவர் விவரித்தார். ஒரு நபரை துரோகி என்று அழைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பாக அந்த நபர் தேசத்திற்காக தியாகம் செய்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என்றும் அவர் கூறினார்.

 

அரசியல் பழிவாங்கல் காரணமாக தமது இரண்டு கால்களையும் இழந்த சதானந்தன் மாஸ்டர் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். சதானந்தன் தமது முதல் உரையின் போது சபையில் தமது செயற்கை உறுப்பை வைத்த தருணம் மிகவும் வேதனையானது என்றாலும் நாட்டிற்கு ஊக்கமளிப்பதாக அவர் விவரித்தார். மிருகத்தனமான தாக்குதலையும் மீறி தமது சேவையைத் தொடர்ந்ததற்காகவும், கொள்கை வகுப்பில் பங்களித்ததற்காகவும் சதானந்தன் மாஸ்டரைப் பிரதமர் பாராட்டினார். இது பெருமைக்குரிய விஷயம் என்று அவர் கூறினார். அத்தகைய நபர்கள் தியாகம் மற்றும் சேவையின் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்றும், அவர்களைப் போன்ற எண்ணற்றவர்களின் அர்ப்பணிப்பு மூலம்தான் தேசம் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக வாழவும் உழைக்கவும் உத்வேகம் பெறுகிறது என்றும் அவர் கூறினார்.

 

தமக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளைப் பொருட்படுத்தாமல், தேசத்திற்காக வாழக் கற்றுக்கொண்டதாகவும், வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு உறுதியான அடித்தளத்தை தயார்படுத்தவும் பாடுபடுவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். கடந்த பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் தம்மைத் துஷ்பிரயோகம் செய்யாமல் கடந்து செல்லவில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.

 

தமது அரசாங்கம் 370-வது பிரிவை நீக்கியது, வடகிழக்கில் அமைதியையும் வளர்ச்சியையும் கொண்டு வந்தது, பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களுக்கு பதிலடி கொடுத்தது, ஆபரேஷன் சிந்தூர் நடத்தியது, மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தது, அப்போதைய பிரதமர் கையெழுத்திட்ட அநீதியான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது என்று பலவற்றைப் பிரதமர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் உண்மையான பிரச்சனை, தாம் இந்த நிலையை எவ்வாறு அடைந்தேன் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாமை மற்றும் அதிகரித்து வரும் விரக்தி என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். எதிர்க்கட்சிகள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு எந்த அர்த்தமும் இல்லை என்று நம்புவதாகவும், பிரதமர் பதவி அவர்களின் குடும்பத்தின் சொத்து என்றும், அதை வேறு யாரும் வகிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

"எதிர்க்கட்சிகளுக்கு நாடு பல ஆண்டுகளாக வாய்ப்புகளை வழங்கியது. மக்கள் தங்கள் எதிர்காலத்தை அவர்கள் மீது பணயம் வைத்தனர். ஆனால் அவர்கள் வறுமை ஒழிப்பு என்ற முழக்கங்களால் நாட்டை தவறாக வழிநடத்தினர்" என்று பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். "ஒவ்வொரு எதிர்க்கட்சி பிரதமரும் செங்கோட்டையில் இருந்து வறுமை ஒழிப்பு பற்றிப் பேசினார். ஆனால் யாரும் உறுதியான நடவடிக்கையை முன்வைக்கவில்லை. ஏனெனில் அவர்களின் முழக்கங்கள் வெற்றுத்தனமாகவே இருந்தன" என்று அவர் குறிப்பிட்டார். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் பாதையை தாம் தேர்ந்தெடுத்ததாக திரு நரேந்திர மோடி கூறினார். அரசுத் திட்டங்களைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டதற்காக இந்தியாவின் ஏழைகளுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.  தங்கள் சொந்த திறன்களை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சிகளைப் பாராட்டினார். அரசின் நோக்கத்தில் ஏழைகள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் பாராட்டினார். மேலும் 25 கோடி குடும்பங்கள் வறுமையின் விரக்தியிலிருந்து எழுந்து, முன்னேற்றத்திற்கு மாறியதை அவர் குறிப்பிட்டார். நம்பிக்கையுடன் எழுந்து நின்ற இந்த 25 கோடி மக்களுக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு, ரயில் பாதைகளில் நூற்றுக்கணக்கானோர் இறந்ததையும், பள்ளி பேருந்துகள் மோதி குழந்தைகள் உயிரிழந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்தார். ஆளில்லா ரயில் பாதைகளை சரிசெய்வது என்பது முடியாத காரியமல்ல என்றும், தமது அரசு அவற்றையெல்லாம் மூடி, எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது என்றும் அவர் கூறினார்.

 

2014-ம் ஆண்டுக்கு முன்பு, 18,000 கிராமங்கள் மின்சாரத்தைப் பார்த்ததில்லை எனவும் பல்பு அல்லது ஒளியைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்றும் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். 2014-ம் ஆண்டு தாம் பொறுப்பேற்ற பிறகு, தமது அரசு கிராமங்களுக்கு வெளிச்சத்தைக் கொண்டு வந்தது என அவர் கூறினார்.

 

முந்தைய காலங்களில் எல்லைகளில் வெடிமருந்துகள் இல்லை, குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் இல்லை, சரியான பூட்ஸ் இல்லாமல் பனியில் நிற்கும் வீரர்கள் என பலமுறை தலைப்புச் செய்திகள் வந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார். தமது அரசு நாட்டின் கருவூலத்தை வீரர்களுக்காகத் திறந்துவிட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கியதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார்.

 

உத்தரபிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, முந்தைய அரசும் ஒருபோதும் தீர்க்க முயற்சிக்காத ஒரு நெருக்கடியான மூளைக்காய்ச்சலால் எண்ணற்ற குழந்தைகள் இறப்பதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசி எப்படி மனம் உடைந்தார் என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். அறிவியல் முன்னேற்றம் இருந்தபோதிலும் மக்களின் பார்வையைப் பறித்த டிராக்கோமா என்ற நோயும் புறக்கணிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார். தமது அரசு மூளைக்காய்ச்சலில் இருந்து நாட்டை விடுவித்து, கண்களை டிராக்கோமாவிலிருந்து காப்பாற்றியது என்பதை திரு மோடி சுட்டிக் காட்டினார். இது திறன், அர்ப்பணிப்பு மற்றும் சமூகத்திற்காக தியாகம் செய்யும் உறுதியை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்த அர்ப்பணிப்பு, மக்களுக்கான இந்த நிலையான உழைப்பு, எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

கடந்த பத்து ஆண்டுகளில் எதிர்க்கட்சியினர் ஐந்து அல்லது ஆறு முறை தாம் பேசுவதைத் தடுக்க முயற்சித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதுபோன்ற முயற்சிகளால் எந்தப் பயனும் இல்லை என்பதை அவர்கள் இப்போது அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டதாகவும், இந்தப் புரிதல் தொடர்ந்து வளர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். குடியரசுத் தலைவரின் உரைக்கு பங்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திரு நரேந்திர மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். பகிர்ந்து கொள்ளப்பட்ட மதிப்புமிக்க கருத்துக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் என்று கூறி குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

 

(Release ID: 2224160)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2229965) வருகையாளர் எண்ணிக்கை : 8
Link mygov.in
National Portal Of India
STQC Certificate