Print
XClose
Press Information Bureau
Government of India
பிரதமர் அலுவலகம்
06 MAY 2019 11:49AM by PIB Chennai
ஒடிசாவில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் விமானம் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மே 03, 2019 அன்று அடித்த  ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.  பிப்பிலி, பூரி, கொனார்க், நிமபதா மற்றும் புவனேஸ்வரை அவர் விமானம் மூலம் பார்வையிட்டார்.  ஒடிசா மாநிலத்தின் ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், முதலமைச்சர்  திரு நவீன் பட்நாயக், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோர் பிரதமருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு, புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதற்காக எடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மாநில மற்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.  தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் மாநிலத்திற்கு வழங்குவதாக பிரதமர் உறுதியளித்தார்.  ஏப்ரல் 29, 2019 அன்று மாநில அரசுக்கு ரூ.341 கோடி ஏற்கனவே வழங்கப்பட்டது.  அதைத் தவிர, தற்போது உடனடியாக ரூ.1,000 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.  அமைச்சக இடைக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு மேலும் உதவி வழங்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

இந்தத் தருணத்தில் ஒடிசா மக்களுக்கு எங்களது முழு ஆதரவை அளிக்கிறோம் என்று பிரதமர் தெரிவித்தார்.  உடனடியாக நிவாரணம் அளிப்பது மட்டுமின்றி மாநிலத்தை மறுசீரமைக்கவும் மத்திய அரசு முழு உறுதிபூண்டுள்ளது.    உயிரிழப்பை குறைப்பதில் தொழில்நுட்பம் சார்ந்த செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் சமீபத்திய வானிலை அறிக்கை தொடர்பான நுட்பங்களை பிரதமர் பாராட்டினார்.  தொழில்நுட்பத் திறன்களும், மனிதர்களின் பங்களிப்பும் இணைந்து பாதிக்கப்பட்டோரை ஒருங்கிணைக்க உதவியுள்ளது.  10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிய மாநில அரசின் முயற்சிகளையும். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துல்லியமான கணிப்புகளையும் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.  கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மீனவர்களின் மன உறுதியை பிரதமர் பாராட்டினார்.  மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக இணைந்து பணி புரிந்தது இறப்பு எண்ணிக்கையை குறைக்க உதவியது என்றும்,  தானும், கடலோர மாவட்டத்தின் முதலமைச்சராக இருந்ததால்,  புயல் போன்ற பேரிடரினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அழிவு குறித்து  உணர்ந்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

உள்கட்டமைப்பு, வீட்டு வசதி, மீனவர்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் ஒடிசா மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் என்று பிரதமர் உறுதியளித்தார்.  விரைவில் அனைத்து சேவைகளையும் மீட்டெடுக்கும் வகையில் மின்சாரம், தொலைத் தொடர்பு, ரயில்வேத் துறை அலுவலர்களும் மற்றும் மத்திய அரசின்  அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.  சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.  புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்க் காப்பீடு தொடர்பாக ஆய்வு செய்ய காப்பீடு நிறுவனங்கள் உடனடியாக தங்களின் ஆய்வாளர்களை அனுப்பி வைத்து  விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

புயலினால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தோருக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.  இந்த கடினமான நேரத்தில் ஒடிசா மாநிலத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

*******